புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில், கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்தார்.

கவர்னர் கிரண்பேடியின் தன்னிச்சையான ஆய்வு, அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை கூட்டம், உத்தரவு என கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்தியதால், கவர்னர் மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே அதிகார மோதல் வெடித்தது.

இதனைத்தொடர்ந்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் 39 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கவர்னர் மாளிகை முன் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் மக்கள் நலத் திட்டங்களை தடுப்பதாலும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிட்டதால் பாஜவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி பாஜகவினர் 5 முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர். அண்மையில் அமித்ஷாவை நேரில் சந்தித்த பாஜவினர் கிரண்பேடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.

இதனிடையே முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இன்னும் 3 மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள், அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் அடுத்தது ராஜினாமா செய்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், தனது அமைச்சரவை ராஜினாமா செய்யாது என்று நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு திடீரென நீக்கினார். தெலங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார். இதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்க உள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது, ராஜினாமா செய்ய முதல்வர் நாராயணசாமி மறுப்பு, கவர்னர் கிரண்பேடி மாற்றம் என்று அடுத்தடுத்த திருப்பங்களால் புதுச்சேரி அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாஜக முன்னாள் அமைச்சர் மீது ‘MeToo’ புகார்; பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு