தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கல்வித்துறையில் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. முன்னதாக பாரதியாரின் உடையில் காவி சாயம் பூசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு காட்டப்பட்ட திருவள்ளுவரின் உடை முழுவதும் காவி சாயத்தில் இருந்தது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பொருள் சார்ந்த ஒரு விளக்கத்தை அளிப்பதற்காக திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில் திருவள்ளுவரின் உருவம் காவி உடையில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் அனைத்தையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் தான் தயார் செய்கின்றனர். குறிப்பிட்ட திருவள்ளுவரின் உருவப்படம் தவறுதலாக இடம்பெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தனது அறிக்கையில், இந்த தவறுக்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும். தமிழ்ப்பற்று மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது.

அய்யன் வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசும் கயமைத்தனத்திற்குக் கல்வித் தொலைக்காட்சியை தாரை வார்த்துத்தர துணிந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர் காட்டப்பட்டதற்கு பல்வேறு தமிழ் அமைப்பினரும், அரசியல் தலைவர்களும் தமிழக அரசிற்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பி உள்ளனர்.

103 கிலோ தங்கம் மாயம்; சிபிஐ மீது திருட்டு வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி