லாபத்தில் இயங்கும் ரயில்களை தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது என திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று (14.3.2022) தொடங்கி, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அப்போது, மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டன.

தென்னிந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட, வடக்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ.308 கோடி மட்டுமே. ஒரே நாடு (One Nation) என்று எப்போதும் பேசும் ஒன்றிய பாஜக அரசு ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக்கூடாது.

மேலும், லாபத்தில் இயங்கும் ரயில்களை தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது.

ரயில்வே துறையில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது” என கனிமொழி எம்.பி மக்களவையில் கண்டனக் குரல் எழுப்பினார்.