2017 ஆம் ஆண்டு விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டப்பிரிவை திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் நாங்கள் இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்து உள்ளது.

மத்திய அரசு கடந்த 2017 மே 23 ஆம் தேதி விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் 1960ல் திருத்தம் கொண்டு வந்தது. 2017ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தில் ‘விலங்குகளை பராமரித்தல் கவனத்தல்’ எனும் பிரிவு சேர்க்கப்பட்டது.

இந்த சட்டப் பிரிவின்படி ஒருவர் கால்நடைகளை கொடுமைப்படுத்துவதாக அறிந்தால், அதிகாரிகள் அவரிடம் இருந்து கால்நடைகளை பறிமுதல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த சட்டப்பிரிவை எதிர்த்து மாடு வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், “எங்களிடம் இருந்து அதிகாரிகள் வலுக்கட்டாயமாக மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். கால்நடைகளை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறோம்,

எங்களின் கால்நடைகளை பறிமுதல் செய்யும் சட்டப்பிரிவை நீக்குங்கள். இந்தச் சட்டம் 1960 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி செல்கிறது. கால்நடைகளை விற்பனை கொண்டு செல்லும் வியாபாரிகள், வாகன ஓட்டுநர்களிடம் இருந்து கால்நடைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் அடிக்கடி மிரட்டுவதும், பணம்பறிப்பதும், சிலர் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவதுமாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தை தடை செய்யாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் வகுப்பு வாதத்தை ஏற்படுத்தும், சமூகத்தின் நல்லிணக்கம் பாழாகிவிடும்” எனத் கூறப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்திருத்தம் குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கே சுத்திடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டிருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில்,

“ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். இந்த விலங்குகள் தான் (கால்நடைகள்) மனுதாரர்களின் வாழ்தாரம். நான் விலங்குகள் எனக் குறிப்பிடுவது நாய், பூனை பற்றி அல்ல. இந்த கால்நடைகளை நீங்கள் எளிதாக அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துவிட முடியாது. விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரிவு 29-ன் விதி முற்றிலும் முரணாக இருக்கிறது.

ஒருவர் கால்நடைகளை கொடுமைப்படுத்தினார் என குற்றத்தை நிரூபித்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்புதான் அவரிடம் இருந்து கால்நடைகளைப் பறிமுதல் செய்ய முடியும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபர் தான் வைத்திருக்கும் கால்நடைகளை இழக்க நேரிடும்.

ஒருவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் முன்னரே, விசாரணையின்போதே அவரிடம் இருந்து அவர் வைத்திருக்கும் கால்நடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முடியாது. ஆனால், இதில் உள்ள சட்டப்பிரிவு சட்டத்துக்கே முரணாக இருக்கிறது.

இந்த சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் நாங்கள் இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும். சட்டத்துக்கு முரணாக சட்டவிதி இருப்பதை அனுமதிக்க முடியாது” என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெயந்த் கூறுகையில், பல்வேறு சம்பவங்களில் விலங்குகளை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனக் கோரினார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஜனவரி 11 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே ஒத்திவைத்தார்.

‘கோவாக்சின், கோவிஷீல்டு’ 2 தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி- மத்திய அரசு