அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்த நிலையில், பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற மே 7 ஆம் தேதியன்று உத்தரவிட்டார்.

அதன்படி, மே 8 ஆம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதால் பேருந்துகளில் பெண்கள் அசௌகரியங்களைச் சந்திக்கக்கூடும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நகர மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்வது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை இன்று (மே 19) வெளியிட்டுள்ளது. அதில்,

1. ஒரு பயணி என்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி அந்த பயணியை ஏற்றிச்செல்ல வேண்டும்.

2. பெண் பயணிகளிடன் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

3. வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும்.

4. பெண்களிடம் எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.

5. பெண்கள் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து பாதுகாப்பாக ஏறி, இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. ஓட்டுனர் பேருந்தை குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது

7. பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பல்வேறு வகையிலான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு செய்தால் போதும்; இ-பாஸ் தேவையில்லை: தமிழக அரசு