தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தனக்கு இருக்கும் மோதல்களுக்கு, தான் நடித்து வரும் புதிய படத்தின் பாடல் மூலம் நடிகர் சிம்பு பதிலளிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்துள்ளன.

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பட விவகாரம் தொடர்பாக, அப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். சிம்பு தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சிம்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சிம்புவிற்கு ரெட் கார்டு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராமில் “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் கொண்ட பாடலை பதிவிட்டுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம், “வந்தா ராஜாவாத்தான் வருவேன்”. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமெக் இப்படம். இப்படத்தின் டிரெய்லர் ரஜினியின் 2.0 படத்தோடு வெளிவர உள்ளது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார் சிம்பு அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன. இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

இது தயாரிப்பாளர் சங்கத்துடன், தனக்கு இருக்கும் மோதலை எதிர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நடிகர் சங்க தேர்த போது, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை நடிகர் சிம்பு எதிர்த்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.