டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக கூறி, தேசத்துரோக வழக்கில் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டும் என மெகபூபா முப்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

டி20 உலக கோப்பையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளத்தில் இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இந்தியாவில் சிலர் கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் கல்வி பயின்றுவந்த காஷ்மீரை சேர்ந்த 3 மாணவர்கள் இந்தியாவின் தோல்வியை கொண்டாடியுள்ளனர்.

இதனையடுத்து 3 மாணவர்கள் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆக்ரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மெகபூபா முப்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆக்ராவில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக பிரதமர் இதில் தலையிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.