புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, செப்டம்பர் 27 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் (பாரத் பந்த்) நடைபெறும் என லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மகா பஞ்சாயத்து விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஒன்றிய மோடி அரசைப் பொறுத்தவரையில் விவசாய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர தயார் என்கிறது. ஆனால் விவசாயிகள் 3 விவசாய சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று உறுதியாக உள்ளதால், விவசாயிகளுடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

கடந்த 9 மாதங்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு, விவசாயிகளின் ஒவ்வொரு போராட்டத்தையும் மூர்க்கமாக ஒடுக்குகிறது. அண்மையில் விவசாயிகள் மீது ஹரியானா காவல்துறை மிக கொடூரமான் தாக்குதலை நடத்தியது. இது நாடு முழுவதும் விவசாயிகளை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது.

இந்நிலையில் 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் கிசான் மகா பஞ்சாயத்து எனும் விவசாயிகள் மாநாடு உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் இன்று (செப்டம்பர் 05) நடைபெற்றது.

இந்த மாநாட்டில், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பாரதீய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாயத், ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்ததுடன்,

நமது நாடு பாஜக ஆட்சியாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இந்த மாநாட்டின் நோக்கமே, நமது விவசாயமும், நாடும் காக்கப்பட வேண்டும் என்பது தான் என்று கூறியதுடன், இது போன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவித்தார்.

மேலும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியதுடன், மேலும் நமது கோரிக்கையை மேலும் வலியுறுத்தும் வகையில், வருகிற 27 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் உணவு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் முன்னேற்பாடாக செய்யப்பட்டன. விவசாயிகளின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய மகா பஞ்சாயத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக, மாநிலம் முழுவதும் இதுபோன்ற போராட்டங்களை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் மிட்டல் செப்டம்பர் 25 ஆம் தேதி பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்த நிலையில், தற்போது, பாரதீய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாயத் வரும் 27 ஆம் தேதி பாரத் பந்த் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

‘தீவிரவாத எதிர்ப்பு’ படிப்புக்கு அனுமதி; சர்ச்சையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்