தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டும் இடத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு ஆய்வு நடத்தியது பரபரப்பை கூட்டியுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு ஆய்வு செய்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உப்பாற்று ஓடையில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தினர்.

வல்லுநர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. வல்லுநர் குழு நாளை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள நிலையில் இன்று ஆலை கழிவுகளை கொட்டும் இடத்தில் ஆய்வு நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆய்வு நடைபெறும் இடத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்துள்ளார். ஆய்வுக்குழுவிடம் வைகோ மனு அளித்தார்.

முன்னதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த மேகாலயா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலா, உயர்மட்டக்குழு உறுப்பினர்களான விஞ்ஞானி சதீஷ் கார்கோத்தி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடிக்கு வந்தனர்.

அந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பசுமை தீர்ப்பாயம் அனுப்பிய ஆய்வு குழுவிடம் தூத்துக்குடி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் மனு கொடுத்ததாக தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி 6 வாரங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என தருண் அகர்வாலா தெரிவித்துள்ளார்.