வறட்சிக் காலங்களில் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் 6 மாநில முதலமைச்சர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

உத்தரப்பிரதேசம், டெல்லி, உத்திரகண்ட், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஓடும் யமுனை ஆற்றில் ஜனவரி முதல் மே மாதம் வரை நீர்வரத்து இருப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த காலங்களில் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தேக்கப்படும் நீரை பங்கிட்டு கொள்வதில் ஆறு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை நிலவுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், உத்திரகண்ட் மாநிலத்தில் யமுனை ஆற்றின் குறுக்கே லக்வார் அணை கட்டப்பட்டு வருகின்றது. இந்த அணையின் கட்டுமானப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த அணையில் இருந்து வறட்சிக் காலங்களில் 6 மாநிலத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு நீரை கொண்டு செல்ல 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய நீர்வளத்துறை, கங்கை மறுசீரமைப்பு துறை, ஆறுகள் மேம்பாட்டுத்துறை மற்றும் 6 மாநில முதலமைச்சர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது.

இதில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, உத்திரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், இமாச்சரப்பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், லக்வார் அணை நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் கையெழுத்தானது.