டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் செயலி இல்லாமல் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் இ-ரூபி வசதியை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.

இ-ரூபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் நேரடித் தொடர்பில்லா சாதனம். பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் இ-ரூபி என்ற புதிய வசதியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த இ-ரூபி வசதியை யுபிஐ தளத்தில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நிதி சேவைகள் துறை, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இதன்மூலம் பயனர்கள் இணையம் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டால், இதுதொடர்பான தகவல் க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான மின்னணு சான்று முறையில் பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த தடையற்ற, ஒரே முறை பணம் செலுத்தும் பொறிமுறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு சான்று மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும்.

இந்த இ-ரூபி, இந்த சேவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்களை, பயனாளிகளுடன் இணைக்கிறது மற்றும் சேவை அளிப்பவர்களையும் நேரடி தலையீடு இன்றி டிஜிட்டல் முறையில் இணைக்கிறது. பரிவர்த்தனை முடிந்தால் மட்டுமே, சேவை அளிப்பவருக்கு பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது.

முன்கூட்டியே பணம் செலுத்தப்படும் ப்ரீ-பெய்டு முறையாக இது இருப்பதால், எந்த நடுவர் தலையீடும் இன்றி, சேவை அளிப்பவருக்கு குறித்த நேரத்தில் பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது. ஊழியர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இந்த டிஜிட்டல் சான்றுகளை தனியார் நிறுவனங்கள் கூட பயன்படுத்த முடியும்.

தாய் சேய் நலத்திட்டங்கள், டி.பி ஒழிப்பு திட்டங்கள், ஆயுஸ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் பரிசோதனை, உர மானியம் போன்ற திட்டங்களின் சேவைகளை வழங்கவும் இதை பயன்படுத்த முடியும்.

இ-ரூபி வசதியை , (ஆகஸ்ட் 2) காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் நிர்வாகத்தில் இந்தியா புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் கட்டணம் உயர்வு!