இந்து அறநிலையதுறையில் பணியாற்றும் அனைத்தும் அதிகாரிகளும், தாங்கள் இந்து, இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன், அருகிலுள்ள கோவிலில் உள்ள முதன்மை தெய்வத்தின் முன், தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளின் படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக கூறி இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென என சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2019, அக்.23 அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வு, மனுவுக்கு நவம்பர் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: மது என்பது-மனைவிக்குச் சக்களத்தி; மானத்தின் சத்ரு: கவிஞர் வைரமுத்து

கடந்த வாரம் வழக்கு மீண்டும் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், இந்து அறநிலைய துறை நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என்பதால் உறுதிமொழி எடுக்கவில்லை எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் உறுதி மொழி எடுக்கும் விதி பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து அறநிலையத்துறை விதிகளின் படி, கோவிலில் பணியாற்றும் ஆணையர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி ஏற்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.