7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் கேட்டு 2 வாரத்தில் பதில் தருகிறோம் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ராபர்ட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
 
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்தநிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட், ஜெயக்குமார் ஆகியோர் 2012-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வார கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இதனையேற்று நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையே 7 பேரை விடுதலை செய்யக்கோரி உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் கோரியதை அந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் கொண்ட அமர்வு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.