நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை நீதிமன்றம் விடுவித்த விவகாரம் தொடர்பான ஆளுநர் மாளிகையின் புகாரை சரிவர கையாளவில்லை என சென்னை காவல்துறை கமிஷ்னர் ஏ.கே.வி. உள்ளிட்ட உயரதிகாரிகள் மீது ராஜ்பவன் வட்டாரம் கோபத்தில் இருப்பதையும், இதனால் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென எடப்பாடி அரசிடம் ராஜ்பவன் வட்டாரம் வலியுறுத்தி வருவதையும் போலிஸ் வட்டாரங்கள் கிசுகிசுத்தன..

இந்த நிலையில் ராஜ்பவனின் வலியுறுத்தல் குறித்து, உயரதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக, சென்னை கமிஷ்னரிடமும் முதல்வர் விவாதித்ததாகத் தெரிகிறது. இதில் கமிஷ்னர் அதிருப்தியடைந்திருக்கிறார்.

இந்த நிலையில், திடீரென்று விடுமுறை எடுத்திருக்கிறார் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன். அவரது விடுப்பு, ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சத்தமில்லாமல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நிலையில் சென்னை காவல்துறையின் கூடுதல் கமிஷ்னர் (தெற்கு) மகேஷ்குமார் அகர்வாலிடம் கமிஷ்னர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்படுமா அல்லது ஆளுனர் தரப்பு ஆட்கள் சொல்வது நடக்குமா விரைவில் தெரியவரும் ..