பிரதமர் மோடி போகுமிடமெல்லாம் பொய் கூறி, அம்பானிக்கும், அதானிக்கும் மட்டும் வேலை செய்வார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று பீகாரில் காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிராக #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டாகி பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மற்றொருபுறம், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்வை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “பீகாரி மக்களிடம் பொய் சொல்லாதிங்க மோடிஜி. போன தேர்தலில் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி உறுதியளித்தார். யாருக்குமே வேலை கிடைக்கவில்லை.

பொதுவெளியில், ராணுவ வீரர்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் தலைவணங்குவதாக மோடி கூறுகிறார். வீட்டுக்குப் போனபிறகு அம்பானிக்கும், அதானிக்கும் மட்டும்தான் மோடி வேலை செய்வார்.

விவசாயிகளை தாக்குவதற்காக மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முதலில் பீகாரில் மண்டிகளையும், குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அழித்தனர். இப்போது ஒட்டுமொத்த தேசத்திற்கும் இதை செய்கின்றனர்.

மோடி போகும் இடத்தில் எல்லாம் பொய்தான் சொல்கிறார். சீன ராணுவம் நமது 20 வீரர்களை கொன்றுவிட்டு 1200 கிலோமீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டது. சீனா நம் நாட்டுக்குள் நுழைந்தபோது, இந்தியாவுக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை என கூறி ராணுவ வீரர்களை மோடி அவமதித்தார்.

பீகாரில் 19 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக பாஜக உறுதியளித்துள்ளது. இதுவும் அந்த வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாயை போலதான்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: மோடியின் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக டிரெண்டான #GobackModi