விருதுநகரில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள மாநகனேரி பகுதியில் இயங்கிவரும் ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணி புரிந்துள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டதின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. வெடி விபத்து ஏற்பட்டு உடனடியாக அங்கிருந்த பட்டாசு தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியேறியுள்ளனர்.

இருப்பினும் ஒரு பட்டாசு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகி இருப்பதாக முதற்கட்ட காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த பகுதியில் லேசாக வெடிவிபத்து நீடித்து வருவதால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்பு தான் உயிரிழந்திருப்பவர்களின் பெயர், விபரம் தெரியவரும் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: இளநிலை பொறியாளருக்கான வேலைவாய்ப்பு