‘எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அந்த ஆண்டு, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்படாது’ என பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளது உபியில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சை நாயகனாக திகழ்பவர் சாக்ஷி மகாராஜ். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துறவியான சாக்ஷி, உன்னாவ் தொகுதியில் தொடர்ந்து 2வது முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி மக்களிடையே தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் முதன்மையானவர்.

ஏற்கனவே டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து தள்ளுங்கள். அங்கு இந்துக் கடவுள்களின் விக்கிரகங்கள் இல்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் ஷரியத் நீதிமன்றங்கள் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று இனரீதியிலாக சர்ச்சை பேச்சுகள், அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதியற்றவர்கள், அவர்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது சாக்ஷி மகாராஜ் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். காற்று மாசு காரணமாக தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம், மற்றும் பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. உபியிலும் தடை விதிக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து கூறிய சாக்ஷி மகாராஜ், “நம் நாட்டில் எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அதே ஆண்டு, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது நிறுத்தப்படும்” என இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையை தீபாவளியுடன் ஒப்பிட்டு பேசியது உபியில் சர்ச்சை கிளப்பியுள்ளது.

சாக்ஷி மகாராஜ் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லியில் தனது அரசு குடியிருப்பில் தனிமையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் பட்டாசு விற்க, வெடிக்க தடை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு