ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 வயது குழந்தை மற்றும் துணை ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நண்பகல் 12:10 மணியளவில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பத்ஷாகி பாலம் அருகே சிஆர்பிஎஃப் படைப்பிரிவினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துணை ராணுவமான ரிசர்வ் போலீஸ் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ரிசர்வ் போலீஸ் வீரர் ஒருவர் பிஜ்பெஹாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில், “மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை செய்தவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநில ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரிசர்வ் போலீஸ் வீரர் மற்றும் 6 வயது சிறுவர் ஆகியோர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், “ஒன்றும் அறியா அப்பாவி 6 வயது சிறுவர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுதையும் சுற்றி வளைத்து, தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க: இந்திய எல்லையில் சீனா புதிய கட்டுமானம்.. காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்?