‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 06 ஆம் தேதி முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் எனக் கூறி, அதற்காக கோயில்களில் வைக்கப்படும் பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்பது, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் 06 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 47 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. அதில், அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வைக்கப்படவிருக்கும் பதாகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள்- ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி