‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பி ஆஜராகாத நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத் துறை.

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளைப் பதுக்குவதற்கும், வாங்குவதற்கும் உதவி செய்வது பொன்சேகா நிறுவனத்தின் பணியாகும்.

இந்த நிறுவனத்திலிருந்து ரகசிய ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஊடகங்களில் வெளியாகி உலகையே அதிர வைத்தது. 80 நாடுகளைச் சேர்ந்த 107 பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்து சர்வதேச ஊடகங்கள் மூலம் இந்த ஆவணங்களை வெளியிட்டனர்.

‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிட்ட ஆவணங்களில், பனாமாவில் மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட பல நாடுகளில் உலகின் லட்சத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கணக்கில் வராத சொத்துகளைப் பதுக்கியுள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஊழல் விவகாரத்தில் சிக்கினர். சவுதி அரேபியா சல்மான், விளாடிமிர் புடின், நவாஸ் ஷெரிப், ஐஸ்வர்யா ராய், அஜய் தேவ்கான், அமிதாப் பச்சன் என்று உலகின் பல முன்னணி பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றன.

இதனையடுத்து பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டூர் டேவிட் குன்லாக்ஸன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பதவி இழந்தனர். அந்த பட்டியலில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இதன்பின் உலகம் முழுவதும் பல நாடுகளில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்படி பிரிட்டனில் 253 மில்லியன் டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்சில் 136 மில்லியன் டாலர், ஆஸ்திரேலியாவில் 93 மில்லியன் டாலர், பெர்லினின் 183 மில்லியன் டாலர் வரியாகவும், அபாரதமாகவும் வசூல் செய்யப்பட்டது.

இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை இதில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பகுதி 37-ன் கீழ், அமலாகக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று (20.12.2021) நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான நடிகை ஐஸ்வர்யா ராய்யிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே இதேபோன்று ஐஸ்வர்ய ராய்க்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டபோது, தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.