இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் உள்பட 380க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் சொத்துக்களைப் பதுக்கியிருப்பதாக பட்டியல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் வெளிநாடுகளில் முறைகேடாகச் சொத்துக்களைப் பதுக்கிவைத்துள்ளதாகச் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) பட்டியல் வெளியிட்டு பெரும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது.

பண்டடோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த புலனாய்வில், கறுப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்தியாவைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்டோரின் பெயர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

நிரவ்மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அவரது சகோதரி தொழில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்துள்ளது. பிரபல பாப் இசை பாடகி ‌ஷகிரா மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா ஷிபர் உள்ளிட்ட பிரபலங்களின் பெயரும் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மேலும் உலக தலைவர்களின் பெயர்களும் இதில் உள்ளது. குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் ஜோர்டான் மன்னர் அப்துல்லா அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை ரகசியமாக குவித்துவைத்திருப்பதாக இந்த புலனாய்வில் தெரியவந்துள்ளது.

வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன்பட்டிருக்கும் இந்தியர்கள், தங்களின் சொத்துக்களைக் கணிசமான பகுதியைக் கடல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புலனாய்வில் 117 நாடுகளிலிருந்தது 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சேகரித்த தகவல்களைத் தான் தற்போது ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு பனாமா பேப்பர் என்ற பெயரில் பலரின் முறைகேடுகள் குறித்து தகவல்கள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ‘பண்டோரா பேப்பர்ஸ்’ வெளிவந்துள்ளது.