இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்ளையும், 8 படகுகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று (20.12.2021) முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் இருந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

அதேபோல், மண்டபம் துறைமுகத்தில் இருந்து சென்ற சபரிதாஸ், அருளானந்தம் ஆகிய இருவரது விசைப்படகுகளில் இருந்த 12 பேரையும் இலங்கை கடற்படை நேற்று (19.12.2021) சிறைபிடித்தனர்.

இதனையடுத்து இலங்கை கடற்படை கைது செய்த 55 தமிழக மீனவர்களை டிசம்பர் 31 ஆம் தேதி வரை சிறை காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 55 மீனவர்களையும், 8 படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ராமேஸ்வரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நங்கூரமிடப்பட்டிருந்தன. விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சகாயம், போஸ், தேவதாஸ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மீனவப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் நாளை (புதன்கிழமை) தங்கச்சி மடத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், ஜனவரி 1 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.