ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக தவறான வதந்தி பரப்பிய புகாரில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தொடர்ந்து திமுக தலைவர்கள் குறித்து பல்வேறு தவறான அவதூறு கருத்துக்களை பரப்பி சர்ச்சையானது. இந்த புகார்களில் கைது செய்யப்பட்ட துரைமுருகன், இனி இதுபோன்ற ஆதாரமில்லாத அவதூறு கருத்துக்களை பரப்ப மாட்டேன் என உத்திரவாதம் அளித்த நிலையில், ஜாமின் வெளியில் வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்- சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு சாப்பிட்ட பெண் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக சாட்டை துரைமுருகன் யூடியூபில் பதிவிட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் தொழிலாளர்களிடம் வீடியோ காலில் கலெக்டர் ஆர்த்தி பேசி அவர்களது உடல்நிலை குறித்து அனைவருக்கும் தெரிவித்தார். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து தொழிலாளர்களின் 18 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து,ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகனை கடந்த ஆண்டு 19.12.2021 அன்று திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவதூறு செய்தி பரப்புதல், உண்மைக்கு புறம்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செய்தி வெளியிடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி சிறையில் உள்ள சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.