தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக் உபகரண நிறுவனமான ஃபாக்ஸ்கான் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்- சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ளது. அந்நிறுவன ஊழியர்கள் கடந்த 16 ஆம் தேதி உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு காரணமாக பாதிக்கப்பட்டனர்.

159 தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இதனையடுத்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள், பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த 18-12-2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து ஆவன செய்யும் என தெரிவித்துப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியதன் அடிப்படையில், பெண் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு 25/12/2021 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “23/12/2021 அன்று மாலை தலைமைச் செயலகத்தில், தொழில்துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் இ.ஆ.ப., காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பி. தாமரைக்கண்ணன் இ.கா.ப. ஆகியோர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுத் தரப்பில் கீழ்க்கண்ட ஆலோசனைகளை / அறிவுறுத்தல்களை வழங்கி, அதனைச் செயல்படுத்துமாறு தெரிவித்தார்கள்.

அதன் விவரங்கள்: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபுரியும் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும்.

தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும். தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்துத் தரமான உணவுகளைச் சமைத்து, உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்புக் கேட்கும்போது வழங்க வேண்டும். விடுப்பில் செல்லும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தேவையான தொழிலாளர்களை மனிதவள முகமைகள் (Manpower Agency) செய்து தர ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் தரவான உணவு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என பாக்ஸ்கான் நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினர், தமிழ்நாடு அரசுத் தெரிவித்த அனைத்து ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களைத் தவறாமல் செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.

பெண் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், மேலும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 15,000 தொழிலாளர்களுக்குத் தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது எனவும், அதனை ஒப்பந்ததாரர்கள் தரமாக வழங்குவதை இனி உறுதி செய்வதாகவும் தெரிவித்தனர்.

தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இத்தொழிற்சாலையை இவ்விடத்திலேயே விரிவுபடுத்தி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் எனவும் உறுதியளித்தனர்” என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.