மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தேசத்தந்தை’ என விமர்சனம் செய்த பாஜக நிர்வாகிக்கு ஐஐஎம்சி (Indian Institute of Mass Communication- IIMC) கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம்சி- இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் கல்வியை வழங்கும் நிறுவனத்தின் பேராசிரியர் பதவிக்கு மத்திய பிரதேச பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் அனில்குமார் சவுமித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நேர்காணலில் சவுமித்ரா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த அனில்குமார் சவுமித்ரா, கடந்த மே மாதம் மகாத்மா காந்தி பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘காந்தி தேசத்தின் தலைவர் தான். ஆனால், இந்திய தேசத்திற்கு அல்ல; பாகிஸ்தான் தேசத்திற்குத் தலைவர். இந்த நாட்டில் அவரைப் போன்று கோடிக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். சிலர் மதிப்புடையவர்கள். சிலர் மதிப்பற்றவர்கள்’ எனப் பதிவிட்டிருந்தார்.

சவுமித்ராவின் இந்த பதிவால் கடும் சர்ச்சைகள் எழுந்தவுடன், பாஜக அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல.

கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வெளியாகி வரும் பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடான சரைவேதியில் (Charaiveti) ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் கத்தோலிக்க தேவாலயங்களில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள் பற்றி ‘Church ke nark me nun ka Jeevan’ என்ற கட்டுரையை எழுதியதன் காரணமாக இவர் பாஜகவிலிருந்து அப்போது நீக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இதுபோன்று பாஜக அரசு தனது ஆட்சிக்காலத்தில் அரசு உயர் பதவிகளில், திறமையின் அடிப்படையில் பதவி அளிக்காமல், தங்களுக்கு சாதகமானவர்களையே நியமித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழக எம்பி.க்களை நியமிக்காமல், ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமான அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா சண்முகம் என்பவரை நியமித்து மிகப் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

சிறுநீர் கழித்து சிக்கிய ஏபிவிபி தலைவரை எய்ம்ஸ் உறுப்பினராக்கிய பாஜக அரசு