அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் உள்ள கணக்கர் (Accountant) வேலைக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை புகுத்தி வரும் மத்திய அரசு, தமிழகத்தில் நடைபெறும் அஞ்சலக தேர்வுகளையும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் எழுதச் சொன்னது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். எம்.பி.வெங்கடேசன் கடிதத்திற்கு, இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா பதில் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்.14ஆம் தேதி நடக்கவிருக்கும் அஞ்சலக தேர்வை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை செய்தி குறிப்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டு, இது தமிழர் திருநாளுக்கு கிடைத்த பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காற்றில் பறந்த மத்திய அமைச்சர் வாக்குறுதி.. தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு