முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கியதாகவும்,

இதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரியும், சிபிஐ விசாரணை கோரியும் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே வருவதால் வெளிப்படையான விசாரணைக்காக சிபிஐ விசாரணைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 03 ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி பதில்மனு தாக்கல் செய்தார். அதில், “நெடுஞ்சாலை சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியது உலக வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது. எடப்பாடி பழனிசாமியின் இந்த செயலால் அதிக விலையை அரசு ஒப்பந்தங்களுக்கு கொடுக்க நேர்ந்தது. இதனால் கடுமையான இழப்புகள் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகள் மீதான விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு. எனவே, சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (03.08.2022) விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், “ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் நாங்கள் இல்லாத நிலையில் உயர் நீதிமன்றம் எந்த கருத்தையும் கேட்காமல் ஒருசாரரின் கருத்தை கேட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி, “இந்த வழக்கில் எதிர்மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி, சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று கோருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கை சிபிஐ தான் விசாரணை செய்ய வேண்டுமென்று இல்லை. ஆனால் சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெற வேண்டும். அது எந்த அமைப்பாக இருந்தாலும் ஆட்சேபம் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “எடப்பாடிக்கு பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் சீலிடப்பட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் தொடக்க நிலை விசாரணை அறிக்கையை முதலில் சென்னை உயர்நீதிமன்றம் தீர ஆய்வு செய்து, அதன்பின்னர் வழக்கை விசாரித்து உரிய முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக வழக்கை விசாரித்த பின்னர் இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யலாம்” என்று உத்தரவிட்டனர்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி மீது ஏற்கனவே ரூ.4,800 கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார்கள் உள்ள நிலையில், கடந்த மாதம் புதிதாக ரூ.692 கோடி நெடுஞ்சாலை துறை ஊழல் புகார் ஒன்றை அறப்போர் இயக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.