பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சக்தி, குடிபோதையில் வாகனம் ஓட்டி மற்றொரு காரை சேதப்படுத்திவிட்டதாக சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி. சின்னத்தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் , தற்காப்பு, சிவலிங்கா, உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் ‘டிரிகர் சக்தி’ என்று புகழ் பெற்று, சினிமாவில் இழந்த தனது செல்வாக்கை மீட்டார்.

இந்நிலையில் நடிகர் சக்தி இன்று மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நின்றுக்கொண்டிருந்த ஈகோஸ்போர்ட்ஸ் காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.

பிறகு பொதுமக்கள் அவரது காரை மடக்கி பிடித்து தடுத்த போது, காரை ஓட்டியது நடிகர் சக்தி என்பது தெரியவந்தது. மேலும், அவர் மதுபோதையில் இருந்ததையும் பொதுமக்கல் கவனித்தனர். இதனையடுத்து அண்ணா நகர் போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பத்து, பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், நடிகர் சக்தியை விசாரணைக்காக அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தில் காயமோ, இழப்போ ஏற்படவில்லை என்றாலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணை முடிந்து, கைது செய்யப்பட்ட நடிகர் சக்தி பிணையில் விடுதலை பெற்றுள்ளார். மேலும் நடிகர் சக்தி விபத்து ஏற்பட்ட போது ஓட்டிய காரை, அண்ணா நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.