தமிழ் சினிமாவில் அடல்ட் ஹாரர் காமெடி படங்களுக்கு வரவேற்பு உள்ளது. கௌதம் கார்த்திக், யாசிகா ஆனந்த் மற்றும் வைபவி சாண்டில்யா நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ அடல்ட் காமெடி படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் நிரந்ததாகவே இருந்தது.

இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, நம்பர் ஒன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சிவா இயக்குகிறார். படம் பற்றி சில தகவல்களை கூறுகையில்,

இப்படத்தை நான் அடல்ட் ஹாரர் காமெடி என்று குறிப்பிடுவதைவிட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ, இழிவுபடுத்தவோ கூடாது என்பதுதான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும்.

மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயல்கிறோம். ’சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய வரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்’ என்று விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படம் 3Dயில் படம்பிடிக்கப்படும் முதல் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ திரைப்படம். படத்தின் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.