தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் சார்பில் குடிமைப் பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டு முதல்நிலை தேர்வு இலவச பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் மத்திய தேர்வாணைக்குழு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச பயிற்சியை அளித்துவருகிறது.

இதற்காக தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று (10.12.2021) குடிமைப் பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டு முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 05.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது.

சென்னை, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, சத்தான உணவு மற்றும் தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேர தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலைத் தேர்வுக்காக அனுமதிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு, பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 11-12-2021 முதல் 28.12.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், பயிற்சியில் சேரவிரும்புவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தகுதியுடைய நபர்கள் 23.01.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.