தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், 2 வாரங்கள் மட்டும் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளதாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விபிஎஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்று நேற்று (நவம்பர் 9) நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

தற்போது யூஎஃப்ஓ மற்றும் க்யூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில், இரண்டு நிறுவனங்களுமே நவம்பர் மாதம் மட்டும் விபிஎஃப் கட்டணம் தேவையில்லை என்று அறிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத் தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.

விபிஎஃப் சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று விபிஎஃப் கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்திருக்கிறது. நல்லது!

திரையரங்கங்களுடன் எங்களுக்குப் பங்காளிச் சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணத்தை விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்குப் பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, விபிஎஃப் கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதேசமயம் விபிஎஃப் கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

விபிஎஃப் கட்டண சர்ச்சை; புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கலா..