11 நாட்களில் அடுத்தடுத்து 4 யானைகள் பலியானதும், அதிலும் 3 யானைகள் 2 நாட்களில் பலியானாதும் கோயம்புத்தூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் மன்னார்காடு காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. இந்நிகழ்வு இந்தியா முழுவதும் சர்ச்சையை  ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை காட்டுப் பகுதியில் அடுத்தடுத்து 4 யானைகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தியமங்கலம் காடு தொடங்கி பவானிசாகர் காட்டுப்பகுதி வரை பல்வேறு காட்டுப்பகுதியில் இருந்து இங்கே யானைகள் வருவது வழக்கம் . 50க்கும் அதிகமான யானைகள் இங்கே எப்போதும் காணப்படும்.

யானைகளுக்கு அதிக பாதுகாப்பான காட்டுப்பகுதியாக இந்த வனப்பகுதி திகழ்ந்து வந்தது. இந்நிலையில் இந்த காட்டுப்பகுதியில் அடுத்தடுத்து 11 நாட்களில் 4 யானைகள் பலியானதும், அதில் 3 யானைகள் வெறும் 2 நாட்களில் பலியானாதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் மூன்று பெண் யானைகள், ஒரு ஆண் யானை இறந்துள்ளது.

இதில் 17 வயது ஒரு யானை, இரண்டு யானையின் வயது 24 மற்றும் 25, மற்றொரு யானையின் வயது 48 ஆகும். அனைத்து யானைகளும் ஒரே மாதிரி உடல் மெலிந்து இறந்துள்ளது. யானைகள் எப்படி பலியானது என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த யானையின் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதேபோல் இறந்த யானைகளில் 3 யானைகளின் உடல் அழுகி போய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா யானைகளும் உயிருக்கு போராடி பலியாகி உள்ளது. இப்படி யானைகள் தொடர்ந்து பலியாகும் சம்பவம் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கர்ப்பிணி யானை இறந்ததற்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் நீதி கேட்டு போராடினர். தற்போது 4 யானைகள் வெறும் 11 நாட்களில் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தற்கு நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் வாசிக்க: கேரள யானை மரணதிற்கு நீதி கேட்டு தொடங்கிய கையெழுத்து இயக்கம்