பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கேரளாவில் இடைவிடாது பெய்து வந்த மழையால் மாநிலமே வெள்ளக்காடானது. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்,.மேலும் பலரை காணவில்லை.

இந்நிலையில், பெருவெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று (18.10.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன.

பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை திமுக அறக்கட்டளையின் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.