திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 14 முதல் 18 வயது வரை உள்ள மாணவிகளை மீட்க கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சி.எம்.சிவபாபு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல், கொரோனா பரிசோதனை செய்யாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், கடந்த நான்கு மாதங்களாக மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க முடியாமல் இருப்பதாகவும், சொல்லப்படாத துயரங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் ரூ.500 முதல் ரூ.2,000 வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ-பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டு அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அதிமுக அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இ-பாஸ் இல்லாமல் குழந்தைகள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை விளக்க தனியார் நிறுவனத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மேலும், நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா என கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் வாசிக்க: ட்விட்டர் கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க முடியாது- பிரசாந்த் பூஷன்