யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பாதிப்பதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் யூடியூப் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுவதால் பலரும் தங்களுக்கென தனியாக யூடியூப் சேனல்களை தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கூட அதிகமான இளைஞர்கள் நகைச்சுவை, அறிவியல், சமையல், அரசியல் என தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் யூடியூப் சேனல் தொடங்கி அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, தனது யூடியூப் மூலம் தனக்கு மாதந்தோறும் ரூ.4 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, “கொரோனா பொது முடக்கக் காலத்தில் வீட்டிலிருந்தபோது நான் இரண்டு காரியங்களைச் செய்தேன். ஒன்று நான் வீட்டில் சமையல் செய்ய ஆரம்பித்தேன், மற்றொன்று இணைய வழியில் கருத்தரங்குகள் நடத்தினேன்.

இந்த கருத்தரங்கில் நான் பேசியதை, எனது யூடியூப் சேனலில் பகிர்ந்தேன். இந்த வீடியோக்களை அதிகமான பார்வையாளர்கள் பார்த்ததால் வருமானம் வரத்தொடங்கியது. இதனையடுத்து மாதா மாதம் எனக்கு யூடியூப் மூலம் ரூ.4 லட்சம் வரை வருமானம் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.