கே.சி.வீரமணி வீட்டில் நடந்த சோதனையில், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், அமெரிக்க டாலர்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் சுமார் 275 யூனிட் ஆற்று மணல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரைத் தொடர்ந்து, கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல், சொகுசு விடுதி, கல்வி நிறுவனம், உறவினர் வீடு, சென்னையில் உள்ள வீடு உள்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று (செப்டம்பர் 16) காலை 6.30 மணி முதல் இரவு 11.20 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர்கள், ஹார்டு டிஸ்க்குகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரொக்கமாக 34 லட்சத்து 1,060 ரூபாய், 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.

இது தவிர கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள சுமார் 275 யூனிட் மணல் கைப்பற்றப்பட்டது. இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

[su_image_carousel source=”media: 26499,26498,26500″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு மூத்த அமைச்சராக வலம் வந்த கே.சி.வீரமணி பாலாற்று பகுதியில் மணல் கடத்தி வருவதாக ஏற்கெனவே அவர் மீது புகார் எழுந்தது.

இது மட்டுமின்றி அமைச்சராக கே.சி.வீரமணி பதவி வகித்தபோது அவர் பல்வேறு இடங்களில் கட்டி வந்த கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல் கட்டுமானப்பணிக்கு பாலாற்று மணல் அதிக அளவில் கடத்தப்பட்டு கட்டிடப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளையொட்டியுள்ள பாலாற்று பகுதிகளில் இருந்து கே.சி.வீரமணி தனது ஆதரவாளர்கள் மூலம் மணலை கடத்தி ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு கடத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பேரில், அவர்களிடம் புகார் பெறப்பட்டு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது மணல் பதுக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மணல் கடத்தல் தனியாக விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கே.சி.வீரமணியின் வீட்டில் அமெரிக்க டாலர் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு; ரெய்டில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்