மோடி மற்றும் பாஜகவின் விளம்பரதாரராக காங்கிரஸ் கட்சி செயல்படுவதால் தான் அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவா சட்டப் பேரவைக்கு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த தேர்தலில் சில இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போன காங்கிரஸ் கட்சி, இம்முறை தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது.

அதேசமயம் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சென்றுள்ளார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (30.10.2021) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “காங்கிரஸால் மோடி இன்னும் பலமாகப் போகிறார். ஏனென்றால் பாஜகவின் விளம்பரதாரராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸால் தற்போதும் சரியாக முடிவெடுக்க முடியாவிட்டால் நாடு பாதிக்கப்படும். ஏன் நாடு பாதிக்கப்படவேண்டும், அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன. இனிமேலும் தேசம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காது” என்று மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார்.

மேலும் மேற்குவங்க தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடுவதற்குப் பதிலாக காங்கிரஸ் என்னை எதிர்த்துப் போட்டியிட்டது. நீங்கள் காங்கிரஸை எதிர்த்து போட்டிகிறீர்களே என கேட்கிறீர்கள். அவர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டார்கள்.

இங்கு கோவாவில் கூட அவர்கள் எங்களை எதிர்த்துப் போட்டிகிடுகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தா பாராட்ட முடியும். நாங்கள் மாநில கட்சிகளை இணைத்து செயலாற்ற விரும்புகிறோம். இதன் பிறகு மத்தியிலும் நாங்கள் வலிமையாவோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியத்தை காங்கிரஸ் அங்கீகரிக்கத் தவறிவிட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மம்தா பானர்ஜி, பாஜகவை எதிர்கொள்ளவும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும் பிராந்தியக் கட்சிகளின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் உணரவில்லை என்றும் தெரிவித்து வருகிறார்.

தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக மற்றும் மோடியை வீழ்த்தும் வியூகம் இல்லை என தெரிவித்திருந்த நிலையில், மம்தா பானர்ஜியின் வார்த்தைகள் அதனை ஆமோதிக்கும் வகையில் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.