ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, மாநிலத்திற்குள் விசாரணை நடத்த சிபிஐ அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது கேரள அரசு.

மத்திய புலனாய்வுத் துறைக்கு வழங்கப்படும் வழக்குகளை, நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளிடம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம்.

ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் திரும்ப பெற்றன.

அதேபோல் அண்மையில் டிஆர்பி முறைகேடு, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்குகளை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் விசாரணை நடத்த அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் நுழைய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தடை விதித்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ வழக்கு விசாரணை செய்வதற்கான அனுமதியை கேரள அரசும் ரத்து செய்துள்ளது. கேரள அமைச்சரவையின் இந்த முடிவால் சிபிஐ வழக்கு விசாரணைகளுக்கு மாநில அரசின் அனுமதி பெற்றே சிபிஐ நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு கூறுகையில், மத்திய புலனாய்வுத் துறையின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். மேலும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் மத்தியில் நிலவி வரும் அதிகாரப் போர் அதற்கு முக்கிய காரணமாகும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

மேலும் மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரங்களை மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளரை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்