தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் காலம் துவங்கி, அஜீத், விஜய் வரை நடித்துள்ளவர், கே.ஆர்.ரங்கம்மாள் (வயது 75). நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். இவருக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் வயிற்று பிழைப்புக்காக மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று வருகிறார். கடற்கரைக்கு வருவோர் இவருடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து ரங்கம்மா பாட்டி கூறுகையில், நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்திருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.

500 படங்களுக்கு மேல் நடித்து நான் சம்பாதித்த பணத்தை எனது பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். தற்போது சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், கஷ்டப்படுகிறேன். அதனாலேயே மெரினா கடற்கரைக்கு வந்து கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு சொற்ப வருமானமே கிடைக்கிறது. அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவே எனக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.