பாசிச பாஜக என முழங்கிய மாணவியை கைது செய்ய வைத்த தமிழிசைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவுகளை எழுதியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்பாக “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என கோஷமிட்டார் மாணவி சோஃபியா. இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அவர் மீது புகார் அளித்ததின் அடிப்படையில் சோஃபியா கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், “டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய ட்வீட்டுகளில் ‘ஏர்கிராப்ட்’ என்று பல முறை குறிப்பிட்டதை தவிர உண்மையான செய்திகளின்படி சோபியாவுடனான சம்பவம் விமான நிலையத்தில் நடந்துள்ளது. ‘விமானம்’ என்பதற்கான ஆங்கில வார்த்தையை தவறாக பல முறை தன் ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள தமிழசையின் தரப்புதான் பொய்யான தகவல்களுக்கு பொறுப்பு.

இதுகுறித்து, விமான நிறுவனமோ, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ இது ஒரு பிரச்சனை என்று சொல்லவில்லை” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சோபியாவுக்குப் பின் யாரோ இருந்து இயக்குவதாக தமிழசை கூறியதைச் சுட்டிக்காட்டிய நடிகர் சித்தார்த், “இது தான் இந்திய அரசியலில் உள்ள பலரின் குணம். பாசிச பாஜக அரசு ஒழிக என்று ஒருவர் மட்டும் கோஷமிடவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் கோபப்பட்டு பேசிய தமிழிசையின் வீடியோவையும் ரீட்வீட் செய்துள்ளார் சித்தார்த். இதற்காக பலர் பாராட்டினாலும் சிலர் அவரை திட்டியும் உள்ளனர்.


இதற்கு முன்பும், அய்யப்பன் கோவில் விவகாரம் கூறித்து ஆடிட்டர் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி போட்ட ட்டுவிட்டிற்கு சித்தார்த் கோபத்துடன் பதில் டிவிட் போட மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புச் செய்திகள்: ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திக்கு சித்தார்த் ஆவேச பதிலடி