பிரபல நரம்பியல் மருத்துவர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு, 2 பேருக்கு ஆயுள் தண்டனை என விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதி பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என்று 20க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் என்ஜினியர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள்.

கைது செய்யப்பட்ட பத்துப் பேரில் ஐயப்பன் என்பவர் அப்ரூவரானார். இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிற்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஷ்மணராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று (ஆகஸ்ட் 04) அளித்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு தூக்குத் தண்டனையும் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்.

பாலியல் புகார்: சிவசங்கர் பாபா மீது 3வது போக்சோ வழக்கு பாய்ந்தது