சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும், பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த சம்பத் ராஜ் என்கிற சஞ்சீவி (வயது 45) என்பவர் சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தி வருகிறார். இவர் சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கான தங்கும் விடுதி குறித்து விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விடுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியை உள்பட 7 பேர் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் பேராசிரியை தனது தலைமுடியை காய வைப்பதற்காக ஹேர்டிரையரை பயன்படுத்த அங்குள்ள மின்சார பிளக்கில் சொருகினார். ஆனால் பிளக்கில் அது நுழையவில்லை. எனவே அவர் பிளக்கை கழற்றி பார்த்தார். அப்போது அதனுள் சிறிய கேமரா இருந்தது. கேமராவே பிளக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உடனே ரகசிய கேமராக்களைக் கண்டறியும், ‘Hidden Camera Detector’ என்ற செயலியை செல் போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து அறைகளிலும் சோதனை செய்துள்ளனர். அப்போது, படுக்கை அறை, குளியல் அறைகளில் இருந்த சுவிட்ச் போர்டு, எல்இடி விளக்குகள், அழைப்பு மணி, துணி மாட்டும் ஹேங்கர் என 10 இடங்களில் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக புதுச்சேரியில் உள்ள தனது உறவினரான போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அவர் இதுபற்றி பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் கூறினார்.

இதையடுத்து தென் சென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் ஆதம்பாக்கம் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, ராஜு, போலீஸ் ஏட்டுகள் பாலகிருஷ்ணன், ரகு, அந்தோணி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 9 ரகசிய வயர்லெஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 3 குளியல் அறை, படுக்கை அறை விளக்கு, ஹாலில் உள்ள கடிகாரங்கள், ஹேங்கர், பூ ஜாடி, கண்ணாடி ஆகிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த கேமராக்கள் மூலம் சம்பத்ராஜ் பெண்களை ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பத் ராஜை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள். விடுதியில் தங்கி இருந்த பெண்களிடம் விசாரித்தபோது சம்பத் ராஜின் வீட்டு முகவரி தெரியவில்லை. பின்னர் விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் யார் மூலம் விடுதியில் சேர்ந்தீர்கள் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது இணையதளம் மற்றும் பேஸ்புக்கில் முகவரி பார்த்து விடுதியில் வந்து தங்கியதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பத் ராஜ் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பஜனை கோவில் 3-வது தெருவில் வசித்து வருவதாக தெரியவந்தது. இதையடுத்து சம்பத்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன்.

எனது மனைவி சித்தா மருத்துவர். விடுதியில் தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதித்தனர். வீட்டை வாடகைக்கு எடுத்தபோதே என்ஜினீயர் வேலை முடிந்ததும் கேமராக்களை நானே ரகசியமாக பொருத்தினேன். இந்த கேமராக்களை ஆன்லைன் இணையதளத்தில் வாங்கினேன். ஒவ்வொரு கேமராவும் ரூ.2,500 ஆகும்.

இவை அனைத்துமே உளவுத்துறையினர் பயன்படுத்தும் ரகசிய கேமரா ஆகும். பட்டன் வடிவில், ஹேங்கர் வடிவில் இந்த கேமராக்கள் இருந்தன. இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தி இருந்தேன். இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டுமே பதிவு செய்யும் கேமரா ஆகும். மற்ற நேரங்களில் இயங்காது. இந்த கேமராக்கள் மூலம் மெமரி கார்டில் பதிவான படங்களைத்தான் பார்க்க முடியும் என்பதால் தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் வைபை மூலம் இயங்க கூடிய 3 குண்டு பல்புகளுடன் கூடிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன்” என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சம்பத்ராஜ் இதற்கு முன்பு தேனாம்பேட்டையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டபோது தனது நிறுவனத்தில் வேலை செய்த பெண்களை ஆபாச படம் எடுத்து வைத்திருந்தார். அந்த சி.டி.யை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் சம்பத்ராஜ் மீது வளசரவாக்கம், விருகம்பாக்கம், பெங்களூர் போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகளும் பதிவாகி உள்ளன.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள், பணியின் நிமித்தமாகவும், மேல்படிப்புக்காகவும் சென்னையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் சென்னையில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.