லதா ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் வரயிருப்பதால், பாதுகாப்பு தருமாறு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர்.

தற்போது, சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். விசாகனும் கனிகா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனை கனிகா திருமணம் செய்து கொண்டார். நடிகை த்ரிஷா திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டவர் தான் வருண் மணியன். அவர்களது திருமணம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் கடந்த 6ம் தேதி முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் 11ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதால், போலீஸ் பாதுகாப்பு வேண்டி, லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால், அந்த சமயங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும். இதனால் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதோடு, போக்குவரத்தும் சரிசெய்யபட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.