பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜஸ்தாஸுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுபயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் மீதும், அவருக்கு உதவியதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன் மீதும் 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையை அடுத்து, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்பி கண்ணனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து ராஜேஷ் தாஸை ஆகஸ்ட் 09 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று (ஆகஸ்ட் 09) நடைபெற்றபோது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமி; தலைநகர் டெல்லியில் நடந்தேறிய அவலம்