டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளங்களை வெளியிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் ராகுல் காந்தியின் ட்விட்டை நீக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பழை நாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதியில் அந்த சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலையில், அந்த சிறுமி குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள தர்காவுக்கு முன்பாக விளையாட செல்வதாக கூறினார்.

ஆனால், முதலில் ஐந்து நிமிட நடை தூரத்தில் உள்ள மின் தகனம் மற்றும் இடுகாடு இருந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குளிரூட்டும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருமாறு சிறுமியை அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.

பிறகு கடைவீதிக்கு செல்லும் வழியில் தமது மகளை இடுகாட்டின் வாயிலில் இறக்கி விட்ட அவரது தந்தை, ‘இரவு சாப்பிட தண்ணீர் முக்கியம். அதனால் முதலில் வீட்டுக்கு குடிநீர் கொண்டு போய் கொடு, பிறகு விளையாட செல்’ என்று கூறிச் சென்றார்.

ஆனால், அரை மணி நேரம் கழித்து அந்த இடுகாட்டில் பணியாற்றும் பூசாரி ராதே ஷ்யாம், சிறுமியின் தாயைத் தேடி வந்து உடனே இடுகாடுக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து அவருடன் இடுகாட்டுக்குச் சென்று பார்த்தபோது, அந்த சிறுமி மூச்சு நின்ற நிலையில் தரையில் கிடந்தார்.

தனது மகளின் உதடு நீல நிறமாகியிருந்தது. மணிக்கட்டு, முழங்கையில் காயம் காணப்பட்டது. அவரது மூக்கில் ரத்தம் வழிந்தது என்று சிறுமியின் தாய் கூறினார். தனது மகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, உங்களுடைய மகள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரை மின்சாரம் தாக்கியது என்று ராதே ஷ்யாம் கூறியதாகத் தெரிகிறது.

பின்னர் சிறுமியின் உடலை உடனடியாக எரிக்காவிட்டால் காவல்துறையினர் வந்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்று உடலை வெட்ட நடவடிக்கை எடுப்பார்கள். மருத்துவர்கள் மகளின் உறுப்புகளை திருடி விடுவார்கள். எனவே உடனே எரித்து விடுவோம் என்று ராதே ஷ்யாம் அவசரப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அங்கு என்ன நடக்கிறது என்பதை தான் உணரும் முன்பாகவே பூசாரியின் அழுத்தம் காரணமாக சிறுமியின் சடலம் எரியூட்டப்பட்டது. இதற்கிடையே, தனது கணவருக்கும் குடியிருப்பு பகுதி கிராமவாசிகளுக்கும் சிறுமியின் தாயார் தகவல் கொடுக்க அந்த இடுகாட்டில் சுமார் 200 பேர் வரை திரண்டனர்.

கருகிக் கொண்டிருந்த சிறுமி உடலில் இருந்த தீயை அவர்கள் அணைத்தனர். ஆனால், அவரது கால் பகுதியும் சாம்பலும் மட்டுமே எஞ்சியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். மேலும் சிறுமி சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சம்பவ பகுதிக்கு தென்மேற்கு டெல்லி துணை ஆணையர் இங்கித் பிரதாப் சிங் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேசினார். இந்த சம்பவம் தொடர்பாக ராதே ஷ்யாம், மயானத்தின் ஊழியர்கள் குல்தீப் குமார், லக்ஷ்மி நாராயணம், மொஹம்மத் சலீம் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கத்தில் சிறுமியை தவறாக அடைத்து வைத்தது, தடயங்களை அழித்தது போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்த காவல்துறையினர், பிறகு போக்சோ சட்டம், பாலியல் குற்றச்சாட்டுகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளையும் சேர்த்தனர்.

இதற்கிடையே, சிறுமியின் சாவுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முடியவில்லை என்று அது தொடர்பாக ஆராய கேட்டுக் கொள்ளப்பட்ட மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளதாக தென் மேற்கு டெல்லி காவல்துறை துணை ஆணையாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடியிருப்பு பகுதிக்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,

“பெற்றோரின் கண்களில் வரும் நீர் ஒன்றை தெளிவாகக் கூறுகிறது. தங்களுடைய மகளும் இந்த நாட்டின் குடிமகள் தான். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை அவர்களின் கண்ணீர் உணர்த்துகிறது. அந்த பாதையில் நான் அவர்களுடன் துணை நிற்கிறேன்” என்று கூறினார். பிறகு சிறுமியின் பெற்றோருடன் தாம் பேசும் படங்களை ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்களை அடையாளப்படுத்தியதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. இந்த ட்வீட் போக்சோ சட்டத்தின் விதிகளை மீறியது என்பதால் அதை நீக்குமாறும் அதுகுறித்து அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் ராகுல் காந்தியின் ட்வீட்டை நீக்கி உள்ளது.

நாடு முழுவதும் ரயில்களில் வை-பை வசதி ரத்து- ஒன்றிய அரசு