பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59, டீசல் விலை ரூ.85.98 ஆகவும் உள்ளது.

சில மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது. அதுபோல தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.785 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் மத்திய அரசு வழங்கும் மானியமும் ரூ.25 ஆக மட்டுமே உள்ளது.

தொடர்ந்து எரிபொருட்கள் விலை உயர்ந்து வருவதால், உணவுபொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இனிமேலும் விலையேறாமல் தடுத்திடவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும்,

இதுபோன்ற விலையேற்றத்தை தொடர்ந்து செய்து வரும் மத்திய பாஜக அரசையும், அதனை கண்டிக்க முன்வராத அதிமுக அரசையும் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 22 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (பிப்ரவரி 22) மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், பொதுமக்க்ளும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்