பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது என 13 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் சோனியா காந்தி மீண்டும் இன்று (21.07.2022) அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 13 எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐம்மு& காஷ்மீர் தேசிய மாநாடு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தேசியவாத காங்கிரஸ், மதிமுக, விசிக, சிவசேனா, ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தங்களது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத் துறையை தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் நோக்கத்திற்காக இந்த துறையை பாஜக அரசு துஷ்பிரயோகம் செய்துவிட்டது.

எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கட்டவிழ்த்துள்ளது. இப்படியான மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, அரசியலமைப்பு சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.