பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்பு தான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின.

இந்தியாவிலும் ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கிய நிலையில், உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது மீண்டும் இந்தியாவில் பூதாகரமாகியுள்ளது. காரணம், கடந்த 2017 ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.

அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், கடந்த 28 ஆம் தேதி ‘உலகின் அதி சக்திவாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர்’ (The Battle for the World’s Most Powerful Cyberweapon) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அந்த செய்திக் கட்டுரையில், “அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து, ஹங்கேரி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கி உள்ளது.

அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து இந்திய அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் உரிமைக்காக இந்தியா குரல் கொடுத்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியும், அன்றைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கடற்கரையில் நின்று உரையாடினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது இஸ்ரேலிடம் இருந்து ரூ.15,000 கோடி மதிப்பில் பெகாசஸ் உளவு மென்பொருள், ஏவுகணைகள் வாங்கப்பட்டன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியால் இந்தியாவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இஸ்ரேலில் இருந்து பெகாசஸ் மென்பொருளை ஒன்றிய பாஜக அரசு வாங்கியதா, இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க நிலையில், பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் புயலை கிளப்பும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.

கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.