சீன வர்த்தக குழுவினர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.
 
பின்னர், டிரம்ப் அளித்த பேட்டி:புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு மிகவும் மோசமாகி உள்ளது.
 
இரு நாடுகள் இடையே அபாயமான, மோசமான சூழல் நிலவுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தர இந்தியா காத்திருக்கிறது. இதை தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி நிதியை வழங்கி வந்துள்ளோம்.
 
ஆனால், அந்நாடு தீவிரவாதத்தை ஒழிக்கும் கொள்கையுடன் ஒத்துழைக்காததால் அந்த நிதியை நிறுத்திவிட்டோம். ஆனாலும், பாகிஸ்தானுடன் இப்போதும் சிறப்பான உறவை நாங்கள் தொடர்ந்து வருகிறோம்  இவ்வாறு அவர் கூறினார்.
 
 
முன்னதாக புல்வாமா சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதில், பாகிஸ்தானுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், இந்தியாவின் மூவர்ண கொடியை பிடித்தபடியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் அவர்கள் பாரத் மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம், சர்வதேச தீவிரவாதி மசூத் அசாரை ஒப்படை, தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என முழக்கமிட்டனர்.
 
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அமெரிக்கா வாழ் இந்திய பொது விவகார கமிட்டின் தலைவர் ஜெகதீஷ் ஷேவானி கூறுகையில், `புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானுடனான அனைத்து தூதரக உறவையும் பிரதமர் மோடி கைவிடவேண்டும்’’ என்றார்.