பிரபல எழுத்தாளர் தமயந்தி இயக்கியுள்ள படம் “தடயம்”. இப்படத்தில் ஹீரோவாக கணபதி முருகேசன் என்பவர் அறிமுகமாகிறார். நாயகியாக கனி குஸ்ருதி நடித்துள்ளார். கிரவுட் பண்டிங் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் கெனன்யா என்பவர் இசையமைத்துள்ளார்.

வார இதழில் வெளியான சிறுகதையை ஒரே காட்சியில் தடயம் என்ற ஒரு முழுநீளத் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்திய சமூகத்தில் காணப்படுகின்ற காதலில்லாத திருமணங்களின் ஊடே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றியதோர் திரைப்படம், தடயம்.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான்.

அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக, பரவசங்களின் காட்சிப் படிமங்களாக மாற்றித் தந்திருக்கும் திரைப்படம் தான் தடயம்.

இத்திரைப்படத்தை, தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரான தமயந்தி எழுதி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர்கள் சமுத்திரகனி, மீரா கதிரவன், பரத் பாலா ஆகியோருடன் பணிபுரிந்திருக்கிறார். மேலும் பல மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் வார இதழில் வெளியான ‘தடயம்’ சிறுகதையே இப்படத்தின் கரு என்பது குறிப்பிடத்தக்கது.